சென்னை: சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை தலைமை காவலராக பணியாற்றுபவர் ரகுராம் (51). புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார். அதே குடியிருப்பில் வசிக்கும் ஆயுதப்படை காவலர் முருகேசனுக்கும் ரகுராமுக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. ரகுராமின் மகனும் கல்லூரி மாணவனுமாகிய ரவி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது, போதையில் வந்த முருகேசன், ரவியை ஒருமையில் பேசியதால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முருகேசன் கையில் வைத்திருந்த லத்தியால் ரவியை சரமாரியாக அடித்துள்ளார். இதுபற்றி அவரின் தந்தை ரகுராம் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவலர் முருகேசன் மீது ஐபிசி 294 (பி), 341, 324 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.