ஸ்டிராஸ்பர்க்: பிரான்சில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு நடத்தி 3 பேரை கொன்று விட்டு தப்பிய ஐஎஸ் தீவிரவாதியை போலீசார் வேட்டையாடி சுட்டுக் கொன்றனர். பிரான்சின் ஸ்டிராஸ்பர்க் நகரில் கடந்த செவ்வாய்கிழமை கிறிஸ்துமஸ் சந்தையில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்தது. துப்பாக்கியுடன் கூட்டத்தில் புகுந்த தீவிரவாதி சரமாரியாக சுட்டதில் 3 பேர் பலியாகினர். போலீசார் அவனை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடினான். இத்தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஷெரிப் ஷெகாட்டை (29) பிடிக்க 700 பாதுகாப்பு படையினர் நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில், நியூடோர்ப் பகுதியில் தெருவில் சுற்றித்திரிந்த ஷெரிப்பை போலீசார் நேற்று முன்தினம் இரவு மடக்கி விசாரித்தனர். அப்போது போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய ஷெரிப்பை போலீசார் சுட்டுக் கொன்றனர். அங்கிருந்த மக்கள், போலீசாரை வெகுவாக பாராட்டி கோஷமிட்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி