பவானியில் பட்டப்பகலில் திருமணம் முடிந்த 1 மணி நேரத்தில் மனைவி கண்முன் கணவன் கடத்தல்

பவானி: பவானியில் திருமணம் முடிந்து ஒரு மணி நேரத்தில் காதல் கணவனை பைக், காரில் வந்த மர்ம கும்பல் கடத்திச் சென்றது. மணமகளை தள்ளிவிட்டு உறவினர்கள் முன்னிலையில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பவானியில் பரபரப்பை ஏற்படுத்தியது ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகே உள்ள கந்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி மகன் சிவானந்தம் (23). பொறியியல் படித்துள்ள இவர் நசியனூரில் உள்ள தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் லோடிங் இன்சார்ஜாக பணியாற்றி வந்தார். இவர் வேலை செய்த அதே நிறுவனத்தில் இந்திரா நகரை சேர்ந்த மணியன் மகள் பூர்ணிமா (21) வேலை செய்து வந்தார். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனால், இருவரும் திருமணம் செய்து கொள்வதாக முடிவு எடுத்து பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள், ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும் நாளடைவில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பவானி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பச்சையம்மன் கோயிலில் பூர்ணிமாவின் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் சிவானந்தனுக்கும்,  பூர்ணிமாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவரும் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு பவானி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.பவானி தலைமை தபால் நிலையம் அருகே காரை வழிமறித்த 20 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்த மணமகன் சிவானந்தனை அடித்து, இழுத்துச் சென்று மற்றொரு காரில் கடத்திச் சென்றது. இதை தடுக்க முயன்ற பூர்ணிமாவை கீழே தள்ளி விட்டு சென்றது. இதைக் கண்ட உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.இதுதொடர்பாக பூர்ணிமா பவானி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதில் தானும் சிவானந்தமும் திருமணம் செய்துகொண்டு திருமணத்தை பதிவு செய்ய காரில் சென்று கொண்டிருந்தோம். தபால் நிலையம் அருகே சென்றபோது 5 பைக், ஒரு காரில் வந்த சுமார் 20 பேர் காரை வழிமறித்து எனது கணவரை கடத்திச் சென்றனர். நான் வேலை செய்யும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் தான் கணவரை கடத்திச் சென்றனர். எனவே, எனது கணவரை மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: