சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவிகள் 5 பேர் தற்கொலைக்கு முயன்றனர்.விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தில் அரசு மலைவாழ் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 172 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 7ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு இடைவேளையில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவியை தலைமையாசிரியர் வீரன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு, முதல் உதவி சிகிச்சை அளித்துவிட்டு அழைத்து வந்தார்.ஆனால், மாணவிக்கு மீண்டும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனே, சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது மேலும் 4 மாணவிகள் வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததாக தலைமை ஆசிரியருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் 4 பேரையும் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவே அனைவருக்கும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.