ராமேஸ்வரம் கோயிலில் புதிய தீர்த்தம் பிரதிஷ்டை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் மகாலட்சுமி தீர்த்தம் நேற்று அதிகாலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. புதிய தீர்த்தக்கிணற்றில் ஏராளமான பக்தர்கள் நீராடி தரிசனம் செய்தனர்.ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் இருந்த தீர்த்தம் உட்பட 6 தீர்த்தங்கள், இரண்டாம் பிரகாரத்திற்குள் புதிதாக அமைக்கப்பட்டன. இதில் 5 தீர்த்தங்கள் ஏற்கனவே பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. மகாலட்சுமி தீர்த்தம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதையொட்டி, அதிகாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் 2ம் கால யாக பூஜை முடிந்து தீபாராதனை நடந்தது. பின்னர் கலசத்தில் வைக்கப்பட்டிருந்த மகாலட்சுமி தீர்த்தம் கோயில் குருக்களால் ஊர்வலமாக 2ம் பிரகாரத்திற்கு எடுத்து வரப்பட்டது. காலை 6.20 மணிக்கு சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க, மகாலட்சுமி தீர்த்த கிணற்றில் புனிதநீர் ஊற்றப்பட்டு சம்யோஜன தீர்த்த பிரதிஷ்டை செய்யப்பட்டது. காலை 7 மணி முதல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து, மகாலட்சுமி தீர்த்தம் உட்பட மற்ற தீர்த்தக்கிணறுகளிலும் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: