கோபால்பட்டி: இந்த ஆண்டு கரும்பு குறைந்த அளவே விளைந்துள்ளதால் பொங்கலுக்கு விலை மூன்று மடங்கு உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பொங்கல் பண்டிகை கொண்டாட இன்னும் ஒரு மாதமே உள்ளது. இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கரும்பு அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடும் வறட்சி காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கரும்பு விளைந்துள்ளது.கடந்த ஆண்டு 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ₹200 முதல் ₹250 வரை விற்கப்பட்டது. வறட்சி மற்றம் கஜா புயல் காரணமாக கரும்புகள் வெகுவாய் சாய்ந்து விட்டன. இதனால் கரும்பு விளைச்சல் வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு குறைந்த அளவே விளைந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு இதன் விலை உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயி அருள்ஞானப்பிரகாசம் கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே கரும்பின் சாகுபடி குறைந்து விடுகிறது. இந்த ஆண்டு பொங்கல் விழாவின்போது கரும்பின் விலை 3 மடங்கு உயர வாய்ப்புள்ளது,’’ என்றார்.