விருதுநகர்: ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.விருதுநகரில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பசுமை பட்டாசுகளை தயாரிக்க மத்திய அரசு முழுமையான திட்டம் தர வேண்டும். இந்த பிரச்னையை டிசம்பருக்குள் முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர், நிலம், காற்று பட்டாசு உற்பத்தியால் மாசுபாடு அடைவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. இதைவிட ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களாலும், போக்குவரத்து வாகனங்களாலும் காற்று மாசுபடுகிறது. எனவே, நீதிமன்றத்தில் இருக்கும் பட்டாசு வழக்கை விரைந்து முடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரபேல் போர் விமானம் வாங்கியதில், ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்கக்கோரி, சிபிஐ தாக்கல் செய்த மனுவை விசாரிக்க முகாந்திரமும் இல்லை என உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இதனால், நீதிமன்ற விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து மேல் முறையீடு அவசியமானது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி