திருமங்கலம்: பட்டா வழங்கக்கோரி திருமங்கலத்தில் நேற்று அமைச்சர் உதயகுமார் முன்னிலையில், பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நடந்தது.மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட ராயபாளையத்தில் அம்மா திட்ட முகாம் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நேற்று நடந்தது. கலெக்டர் நடராஜன் முன்னிலை வகித்தார். தேசியகீதம் முடித்து முகாம் துவங்கியபோது, பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த உச்சப்பட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி (46) என்ற பெண், `எனக்கு நீதிவேண்டும். பட்டா வழங்க வேண்டும்’ என கோஷமிட்டபடி மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்து, அந்த பெண்ணிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து அவரை வெளியே அனுப்ப முயன்றனர். இதையடுத்து, அமைச்சர் அந்த பெண்ணை அழைத்து, அவரது பிரச்னைக்கு தீர்வு காணும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.