சேலம்: தமிழக அமைச்சர்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்வோம் என்று சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். சேலம் தம்மம்பட்டி, கீரிப்பட்டி பகுதிகளில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இந்த ஆட்சி எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று கணக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த அரசை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. இந்தியாவிலேயே முன்அனுமதி இல்லாமல் சந்திக்க கூடிய ஒரே முதல்வர் நான்தான். இதைத்தான் செயல்படாத அரசு, என்று தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.இன்றைக்கு கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறது. காவிரி படுகையில் உள்ள மாநிலங்களின் அனுமதி பெறாமல் எந்த ஒரு கட்டுமானப் பணியும் மேற்கொள்ள கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை எடுத்துக்கூறி கர்நாடகா மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளோம். அதோடு மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று, அதிமுக எம்பிக்கள்தான், தொடர்ந்து குரல் கொடுத்து நாடாளுமன்றம் செயல்பட முடியாத நிலையை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் கல்வி, தொழில்வளம், சுகாதாரம், மருத்துவம் என்று அனைத்து துறைகளும் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் அமைச்சர்கள் மீது ெபாய்யான வழக்குகளை போட்டு, எப்படியாவது மக்களை திசை திருப்ப வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். எத்தனை வழக்குகள் போட்டாலும், அத்தனை வழக்குகளையும் எதிர்கொள்வோம். என்மீது கூட வழக்கு போட்டார்கள். அதற்கு உச்சநீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பழனிசாமி பேசினார்.