ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே 60க்கும் மேற்பட்ட மண்டையோடுகள் மாந்திரீக தகடுகள் சாலையோரம் வீசப்பட்டள்ளது. புதையல் எடுக்க பூஜையா, அல்லது ஊருக்கு பாதிப்பு ஏற்படுத்த பூஜையா என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சுற்றுலாதலமாக திகழ்வது ஏலகிரிமலை. இயற்கை எழில்சூழ்ந்த இந்த மலையில் பல கிராமங்கள் அடுத்தடுத்து உள்ளன. ஆண்டுதோறும் கோடை காலத்தையொட்டி கோடை விழா அரசு சார்பில்நடப்பது வழக்கம். இந்த விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் இந்த கிராமம் அருகே சாலையோரம் குவியல் குவியலாக மண்டை ஓடு, மாந்திரீக தகடுகள் வீசப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை கோடி ஊரில் இருந்து ஏலகிரி கிராமம் செல்லும் சாலையில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டை வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை அப்பகுதிக்கு வந்த சிலர் சாலையோரம் கிடந்த மண்டை ஓடுகள், மாந்திரீக தகடுகள் குவியல் குவியலாகஇருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அப்பகுதியில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு சிலர் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாலையோரம் கொட்டிக்கிடந்த 60க்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள் சம்மதமாக விசாரித்து வருகின்றனர். ஒவ்வொரு மண்டை ஓட்டிலும் ஒரு தாயத்து, செப்பு கம்பி கட்டப்பட்டிருந்தது. மேலும் மஞ்சள் குங்குமம் வைத்து பூஜை செய்துள்ளனர். யாரோ மந்திரவாதிகள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது.
கடந்த வியாழக்கிழமை அமாவாசையன்று இந்த பூஜை நடந்துள்ளது. எனவே மந்திரவாதிகள் இப்பகுதி மக்களுக்கு ஏதேனும் கேடு விளைவிக்கும் வகையில் மாந்திரீகம் செய்தார்களா? அல்லது புதையல் ஏதாவது எடுப்பதற்காக நரபலி கொடுத்தார்களா? மந்திரவாதிகள் யார் என போலீசார் பலகட்டமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த சிறுவர் முதல் பெரியவர்கள் வரை உள்ள மண்டை ஓடுகள் வைத்து பூஜை செய்துள்ளதால் ஊருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி