சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த முள்ளிப்பாக்கம் கிராமம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அமாவாசை. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு கோதண்டன் (26), கோபால் (18) ஆகிய மகன்களும், லோகநாயகி (15) என்ற மகளும் உள்ளனர். கோதண்டன் அதே பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். 2வது மகன் கோபால் சிறுங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறார். மகள் லோகநாயகி மானாம்பதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை சுமார் 4.30 மணியளவில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளை பிடித்து வர கிருஷ்ணவேணி வயல் பகுதிக்கு சென்றார். இரவு 7 மணி ஆகியும் அவர் திரும்பி வராததால் அவரது கணவர் அமாவாசை, மகன்கள் கோதண்டன், கோபால் ஆகியோர் வயல் பகுதிக்கு சென்று தேடினர். அப்போது அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் சடலம் புதர் ஒன்றின் அருகே இருந்தது. பதற்றத்துடன் அதை தோண்டி பார்த்தபோது அது கிருஷ்ணவேணி என தெரிந்து.தகவலறிந்து வந்த மானாம்பதி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிருஷ்ணவேணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.