சென்னை: தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை சட்டத்தை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தில் நாளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை சட்டம் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது எனவும் 50 மைக்ரானுக்கு அதிகமான அளவில் இருக்கும் பிளாஸ்டிக் பைகளை பொதுமக்களுக்கு கடைகளில் வழங்கினால் கடையின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் காகிதத்தால் ஆன பைகளை பயன்படுத்த அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் மறுசுழற்சி பயன்பாடு முறை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிளாஸ்டிக்கில் எத்தனையோ வகைகள் உள்ளன. இதில் எந்தெந்த பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்தலாம், எதனை உபயோகப்படுத்த கூடாது என்பதை முதலில் அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அதன் பிறகே இந்த தடை சட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து தமிழக அரசு வியாபாரிகளை அழைத்து பேச வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் நாளை காலை தமது தலைமையில் வியாபாரிகள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக விக்கிரமராஜா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி