நாகை: கஜா புயலால் கோடியக்காடு வன விலங்குகள் சரணாலயத்தில் 373 பறவைகள், 18 மான்கள் உயிரிழந்திருப்பது முதல் கட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கஜா புயலால் நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், தலைஞாயிறு ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் உள்ள வன விலங்குள் சரணாலயத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் புயல் காற்றில் வேரோடு சாய்ந்தன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மரக்குவியல்களாகவே காணப்பட்டன. இதனால் வன விலங்குகளின் கதி என்ன ஆனது என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மாவட்ட வன உயிரின காப்பாளர் நாகசதீஷ் கிடிசாலா தலைமையில் வனத்துறை ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர்.