ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து: பாஜ ஆட்சிக்கு எதிரான போரில் பிரமாண்டமான நமது கூட்டணிக்கு வலு சேர்க்கும்

சென்னை: ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேச மாநில சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதற்காக ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். இந்த வெற்றி பாசிச பா.ஜ. ஆட்சிக்கு எதிரான போரில் நமது பிரமாண்டமான கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும் என்று கூறியுள்ளார். ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேச மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது அவர், தேர்தல் வெற்றிக்கு என் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு நமது மிகப் பெரிய வெற்றிக்கு இந்த வெற்றி தொடக்கமாக அமையும் என்றார். தன்னுடைய வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் சோனியா காந்திக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.தேர்தல் முடிவு குறித்து திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கூறியிருப்பதாவது: ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் மாநில தேர்தல்களில் சிறப்பாக செயல்பட்டு இருக்கும் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாசிச பாரதிய ஜனதாவுக்கு எதிரான நமது போருக்கும் இந்த பிரமாண்டமான கூட்டணிக்கும் இந்த வெற்றி மேலும் வலு சேர்க்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். மற்றொரு டிவிட்டரில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:தெலங்கானா சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் சந்திரசேகர ராவுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டிடிபி, ஆந்திர திமுக சார்பில் நிவாரண பொருள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக ஆந்திர மாநில திமுக மற்றும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ₹ 5 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் சென்னை அண்ணா அறிவாலயத்திலிருந்து நேற்று லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார். அதில் அரிசி, பருப்பு, வேட்டி, சேலை, பாய், போர்வை, பிஸ்கட், மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்ப ட்டன.

இந்நிகழ்ச்சியில் திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, தலைமை நிலைய செயலாளர்கள் கு.க.செல்வம் எம்.எல்.ஏ. பூச்சி முருகன், தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் அமைப்பு செயலாளர் அசோக் ராஜ், ஆந்திர மாநில திமுக அமைப்பாளர் கே.எம்.மூர்த்தி, அவை தலைவர் ராமலிங்கம், நிர்வாகிகள் கங்காதரன், வேலன், ஜோதி, சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: