கோவை: அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களின் குழந்தைகளுக்கான காப்பகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், நர்சுகள், பாராமெடிக்கல் ஊழியர்கள் பலர் தங்களின் குழந்தைகளை வீட்டில் விட்டு பணிக்கு வரும் நிலை இருக்கிறது. காலை முதல் பணியில் இருப்பதால் குழந்தைகளை சரிவர கவனிக்க முடியாத நிலையும் உள்ளது. இந்நிலையில், தேசிய சுகாதார குழுமம்(என்எச்எம்) அரசு மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவ ஊழியர்களின் குழந்தைகளுக்கு என தனியாக காப்பகம் அமைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 31 மாவட்ட மருத்துவமனை என மொத்தம் 53 அரசு மருத்துவமனைகளில் மருத்துவ ஊழியர்களுக்கான குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படுகிறது. இதனை முதல் தளத்தில் அமைக்க வேண்டும் எனவும், குழந்தைகளுக்கு பாதுகாப்பான வகையில் காப்பகத்தின் பில்டிங் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.