சென்னை: 5 மாநில தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அடி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 5 மாநில தேர்தல் முடிவுகளில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வென்றுள்ளதை எல்லாத் தலைவர்களும் வரவேற்றிருக்கிறார்கள். நீங்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி யை சந்தித்த பிறகு இந்த முடிவுகள் வந்திருக்கிறது. பாஜ எல்லா இடங்களிலும் படுதோல்வி அடைந்துள்ளது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்கு முன்பு ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்து இருக்கிறது. அதனுடைய முடிவுகள் இன்று வந்திருக்கிறது. இன்னும் முழுமை அடையவில்லை, இந்த தேர்தலைப் பொறுத்தவரையிலே இது ஒரு மினி பார்லிமென்ட் தேர்தல் என்பதுதான் என்னுடைய கருத்து. எனவே, இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று இருக்கக்கூடிய அனைவருக்கும் திமுக சார்பில் என்னுடைய வாழ்த்துகளை, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். பாசிச ஆட்சிக்கு எதிராக நேற்றைய தினம் புதுடெல்லியில் காங்கிரஸ் கட்சியினுடைய தலைமையில் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து கட்சியினுடைய தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டம் நடைபெற்று இன்றைக்கு வெற்றிச் செய்தியாக இந்தச் செய்தி வந்து சேர்ந்திருக்கிறது. இந்தச் செய்தி நிச்சயமாக வர இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு முழுமையான வெற்றியாக வரும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது.