பெங்களூரு: எச்.ஏ.எல். நிறுவனம் மூன்று டன் எடையுள்ள குட்டி ஹெலிகாப்டரை தயாரித்துள்ளது. பரிசோதனையின்போது வெற்றிகரமாக பறந்தது. பெங்களூரு எச்ஏஎல் நிறுவனம் முப்படைகளுக்கு தேவையான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கனரக வாகனங்களை சிறந்த முறையில் தயாரித்து வழங்கி வருகிறது. மத்திய அரசுக்கு சொந்தமான இந்த பொதுத்துறை நிறுவனத்திற்கு மூன்று டன் எடையுள்ள குட்டி ஹெலிகாப்டர்களை தயாரித்து வழங்குவதற்கான ஆர்டர் கிடைத்துள்ளது. இதன்படி மொத்தம் 187 ஹெலிகாப்டர்களை எச்.ஏ.எல். தயாரிக்கிறது. இதில் ராணுவத்திற்கு 126, விமானப்படைக்கு 61 என ஹெலிகாப்டர்கள் வழங்கப்படும்.இதையடுத்து எச்ஏஎல் நிறுவனம் தயாரித்த ‘எல்யூஎச்’ என்ற அந்த இலகு ரக ஹெலிகாப்டரை பறக்கவிட்டு சோதனை செய்யும் நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றது. அப்போது தலைமை பரிசோதனை விமானிகளான உன்னி கே பிள்ளை, அனில் பம்பானி ஆகியோர் அந்த ஹெலிகாப்டரில் பூமியில் இருந்து ஆறு கி.மீ. உயரத்திற்கு பறந்து சென்றனர்.