புதுடெல்லி: சமீபத்தில் மரணம் அடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சோம்நாத் சட்டர்ஜி உள்ளிட்டோருக்கு நாடாளுமன்றத்தில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.நாடாளுமன்றத்தில் குளிர்க்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இது வரும் ஜன.8ம் தேதி நடைபெற உள்ளது. தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று கூடின. இதனால் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே முதல் நாள் கூட்டம் தொடங்கியது. மக்களவை, அதன் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நேற்று கூடியது. சமீபத்தில் மரணம் அடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் வாசித்தார். இது தவிர மக்களவை எம்பிக்களாக இருந்து சமீபத்தில் மரணமடைந்த போலா சிங், ஷானாவாஸ், முகமது அஸ்ரருல் ஹக் ஆகியோருக்கும் மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவையில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அவையில் இருந்தனர்.