3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி...மாற்றத்திற்கான நேரம் உருவாகியுள்ளது: ராகுல்காந்தி பேட்டி

டெல்லி: 5 மாநில தேர்தல் முடிவுகள், காங். தொண்டர்கள், விவசாயிகள், சிறு வியாபாரிகள் ஆகியோருக்கு கிடைத்த வெற்றி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை 8 மணி முதல் 5 மாநிலங்களிலும் வாக்குஎண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக வசம் இருந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசதம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியமைக்க உள்ளது. இதனால் நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தலில் வெற்றியை தந்த பொதுமக்கள் மற்றும் கட்சி ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றி கட்சி ஊழியர்களுக்கு கிடைத்த வெற்றி, தற்போது மாற்றத்திற்கான நேரம் உருவாகியுள்ளது என்றார். விவசாயிகள், இளைஞர்கள் அனைவரும் தங்களை ஆதரித்துள்ளனர் என்றார். தேர்தல் வெற்றியால் காங்கிரசுக்கு மிகப்பெரிய பொறுப்பு ஏற்பட்டு உள்ளது என்று கூறினார். மக்கள் பெருமைப்படும் அளவுக்கு ஆட்சியை வழங்குவோம் என்றும் கூறினார். மேலும் கடந்த தேர்தலில் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டினார். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு எப்படி வேலைவாய்ப்பை உருவாக்கப்போகிறது; பணமதிப்பு ரத்து உள்ளிட்ட எந்த நடவடிக்கையாலும் மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றும் குற்றச்சாட்டினார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடியும் பாஜகவும் வெற்றி பெற முடியாது என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். தெலுங்கானா மற்றும் மிசோரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றும் கூறினார்.

அரசியல் தலைவர்கள் கருத்து:

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)

5 மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடையும் என்பதற்காக எச்சரிக்கை மணி. மேலும் வாக்களித்த 5 மாநில மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நன்றி மற்றும் பாராட்டுக்களை  தெரிவித்துக்கொள்கிறேன்.

நாராயணசாமி  (புதுச்சேரி முதல்வர்)

பிரதமர் நரேந்திர மோடியின் 4 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி குறைந்துவிட்டது.  பண மதிப்பு ரத்து நடவடிக்கையால் தொழில் வளர்ச்சி முடங்கிவிட்டது. 5 மாநில தேர்தல் முடிவுகள் 2019 மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைத்துள்ளது.

திருநாவுக்கரசர் (தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்)

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மோடி அலை ஓய்ந்துவிட்டது, நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தோல்வியை தழுவும். நல்ல தண்ணீர் என கூறும் வடமாநிலங்களிலேயே தாமரை மலரவில்லை,  இங்கு எப்படி மலரும்?.  காங். மன்னிப்பு கேட்க வேண்டுமென, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஏமாற்றத்தின் விரக்தியில் பேசுகிறார்.  ராகுல்காந்தியின் கடும் உழைப்பு பயன் தந்துள்ளது.

தமிழிசை சௌந்தரராஜன் (தமிழக பாஜக தலைவர்)

எந்த தோல்வியும் எங்களை துவளச் செய்யாது, வெற்றி பெற்றால் துள்ளிக்குதிக்க மாட்டோம், தோல்வியடைந்தால் துவள மாட்டோம். மோடி அலை எந்த காலத்திலும் ஓயாது, மோடி அலை ஓய பெரிய தலை எதுவும் இல்லை. இதுநாள் வரை வாக்கு இயந்திரங்களில் குளறுபடி உள்ளது என கூறிய காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜக மோசமான தோல்வியை அடையவில்லை, வெற்றிக்கும், தோல்விக்கும் ஒருசில தொகுதிகளே வித்தியாசம் உள்ளன.

சச்சின் பைலட் (காங்கிரஸ்)

எங்களின் வெற்றி ராகுல் காந்திக்கான பரிசு.  இன்றிலிருந்து சரியாக ஒரு வருடத்திற்கு முன்புதான் காங்கிரஸ் தலைவரானார் ராகுல். பாஜகவை மக்கள் புறக்கணித்து விட்டதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: