கோவில்பட்டி: கஜா புயலுக்கு மத்திய அரசு இன்னும் நிவாரண நிதி வழங்கவில்லை, 354 கோடி டிசம்பர் மாதத்துக்கான பேரிடர் நிதிதான் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு ஆண்டு தோறும் தேசிய பேரிடர் பணிக்காக 2 கட்டமாக நிதி வழங்கி வருகிறது. வழக்கமாக ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் தேசிய பேரிடர் நிதியை மத்திய அரசு வழங்கும். ஏற்கனவே ஜூன் மாதத்திற்கான நிதியை மத்திய அரசு வழங்கி விட்டது. தற்போது டிசம்பர் மாதத்திற்கான 2வது கட்ட நிதியை தான் முன்கூட்டி வழங்கியுள்ளது. ஆனால் சிலர் இதனை தவறுதலாக புரிந்து கொண்டு மத்திய அரசு வழங்கிய 354 கோடி கஜா புயலுக்கு போதாது என்று கூறுகின்றனர். கஜா புயலுக்கு மத்திய அரசு இன்னும் நிதி தரவில்லை. மத்தியக்குழு ஆய்வு செய்து தனது அறிக்கையை மத்திய அரசுக்கு கொடுத்துள்ளது. எனவே நல்ல அறிவிப்பு வரும் என்று நம்புகிறோம்.