அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன் குவித்து ஆல் அவுட்டானது. புஜாரா 123 ரன் விளாசி அசத்தினார். பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 235 ரன்னுக்கு சுருண்டது. டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 15 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்து. பொறுப்புடன் விளையாடிய புஜாரா (71), ரகானே (70) ஆகிய இருவரும் அரை சதம் அடித்தனர்.
அந்த அணியின் ஷான் மார்ஷ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். 166 பந்தில் 60 ரன்கள் எடுத்திருந்த போது பும்ரா பந்தில் அவர் ஆட்டமிழந்தார். பின்னர் மிட்சல் ஸ்டார்க் கம்மின்ஸ் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 41 சேர்த்தது. மிட்சல் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் இருவரும் தலா 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 291 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் பும்ரா, ஷமி, அஸ்வின் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர் இஷாந்த் சர்மா 1 விக்கெட் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி