வேளச்சேரி: தரமணி காவல் நிலைய ஏட்டு ஆண்டவர் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தரமணி பகுதியில் 2 வாலிபர்கள், உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவன ஊழியரை சுற்றிவளைத்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இதை பார்த்ததும் ஏட்டு ஆண்டவரும், போலீசாரும் விரட்டிச்சென்று வாலிபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் போதையில் இருந்த வாலிபர்கள், ‘‘எங்களை பிடித்தால் கத்தியால் குத்திவிடுவோம்’’ என்று மிரட்டிவிட்டு தப்பிக்க முயன்றனர். ஆனால் போலீசார் சாதுர்யமாக செயல்பட்டு 2 பேரையும் மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் தரமணி எம்ஜிஆர் நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் அஜித் (20), அன்பழகன் தெருவை சேர்ந்த விக்னேஷ் (21) என்று தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.