ஆலந்தூர்: சென்னை கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், முத்துராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் மோகன் (48). இவரது மனைவி பரமேஸ்வரி (45). தம்பதிக்கு தினேஷ்குமார் (20), சம்பத் (17) என்ற 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு தூங்கும் முன்பு தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பரமேஸ்வரி பதிலுக்கு பதில் பேசியதால், ஆத்திரம் அடைந்த மோகன் சமையலறையில் இருந்த அம்மிக்கல்லை பரமேஸ்வரி தலையில் போட்டு உள்ளார். இதில், மண்டை உடைந்து பரமேஸ்வரி ரத்தவெள்ளத்தில் அலறி துடித்து உள்ளார். இவரது அலறல் சத்தம்கேட்டு, 2 மகன்கள் ஓடி வந்தனர். அதற்குள் மோகன் தப்பி சென்றார். புகாரின்பேரில் கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் விரைந்து வந்து பரமேஸ்வரியை மீட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.