கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை ஐகோர்ட் கண்காணிக்கும்: நீதிபதிகள் கருத்து

சென்னை: கஜா புயல் பாதித்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த கஜா புயல், கடந்த 16ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கரையை கடந்தது. இதில் நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை உள்பட 12 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.  கஜா புயலுக்கு இதுவரை 46 பேர் பலியாகியுள்ளதாகவும், 2.5 லட்சம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 88 ஆயிரத்து 120 ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், ஒரு லட்சத்து 70 ஆயிரம் மரங்கள் சரிந்து விழுந்து உள்ளதாகவும், ஒரு லட்சத்து 17 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயலால் பாதித்த நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக  அறிவிக்க கோரி, சென்னையைச் சேர்ந்த வக்கீல் ரஜினிகாந்த் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். புயல் பாதித்த பகுதிகளில் அரசு நிவாரண நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. மத்திய அரசும் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

எனவே, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். உயிரிழந்த கால்நடைகள், சேதமடைந்த பயிர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சேதமடைந்த வீடுகளுக்கு பதில் புது வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.  இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், புயல் நிவாரணப் பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

நிவாரணப் பணிகள் தொடர்பான  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும்.   தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், புயல் பாதிப்பு குறித்து பிரதமர், முதல்வரிடம் கேட்டறிந்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரே இரவில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள முடியாது என்று கூறி விசாரணையை வியாழக்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: