×

பலாத்கார புகார் அளித்த பெண் ‘பல்டி’ அரசின் நிதியுதவி ரூ.2 லட்சத்தை திருப்பி செலுத்த கோர்ட் உத்தரவு

மும்பை: பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் சாட்சியம் அளித்தபோது குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக ‘பல்டி’ அடித்ததால் அரசு தரப்பில் அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட ரூ.2 லட்சம் நிதியுதவியை திருப்பி செலுத்த மும்பை செசன்ஸ் கோர்ட் உத்தரவிட்டது. கடந்த 2015ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ஒரு 17 வயது மைனர் பெண், தான் காதலித்த வாலிபருடன் வீட்டைவிட்டு வெளியேறி தலைமறைவானார். தங்கள் மகளை வாலிபர் கடத்திச் சென்றுவிட்டதாக அந்த பெண்ணின் பெற்றோர் முதலில் போலீசில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்கு பிறகு பெண் வீடு திரும்பினார். அப்போது அவர் கர்ப்பமாக இருந்தார். இதனால், மைனர் பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்ததாக வாலிபருக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மகாராஷ்டிரா அரசு, ‘மனோ தைர்யா’ என்ற திட்டத்தின் கீழ் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கும் ஆசிட் வீச்சு, குடும்ப வன்முறை போன்ற சம்பவங்களிலும் பாதிக்கப்படும் பெண்களுக்கும் நிதியுதவி வழங்கி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் காதலனால் கர்ப்பமான மைனர் பெண்ணுக்கும் அரசு தரப்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின்போது, அந்த பெண் திடீரென பல்டி அடித்து தனது காதலனுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தார். காதலன் தன்னை பலாத்காரம் செய்யவில்லை என்றும், தாங்கள் இருவரும் விரும்பி பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும் கூறிய அந்த பெண், தாங்கள் இருவரும் தற்போது கணவன், மனைவியாக ஒரு குழந்தைக்கு பெற்றோராக வாழ்வதாகவும் கூறினார். இதையடுத்து, ‘மனோ தைர்யா’ திட்டத்தின் கீழ் அரசு வழங்கிய ரூ.2 லட்சத்தை திருப்பி செலுத்த உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை முடித்து வைத்தார் நீதிபதி.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court ,Rs , Rape, Court,
× RELATED விளம்பரங்களுக்கு அனுமதி தருவதில்...