புதுச்சேரி: காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரெஞ்சு குடியுரிமை பெற்ற நிர்வாகியை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். புதுச்சேரி வெங்கட்டாநகர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சாந்தரூபன் (66). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். பிரான்சில் கணித பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், வீட்டோடு சேர்த்து கடந்த 2002 முதல் காப்பகம் நடத்தி வருகிறார். இந்த இல்லத்தில் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆதரவற்ற சிறுவர், சிறுமிகள் 22க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இதில் பெற்றோரால் கவனிக்க முடியாதவர்களும் அடங்கும். இந்த காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை நடப்பதாக புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவுக்கு புகார்கள் வந்தன.