சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து மாற்றக்கோரி டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 19 பேர் தமிழக ஆளுநரிடம் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து, 19 பேருக்கும் பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இதில் எஸ்.டி.கே.ஜக்கையன் அரசுக்கு ஆதரவாக மாறினார். இதையடுத்து, வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 18 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, பேரவைத் தலைவரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தார். மற்றொரு நீதிபதி எம்.சுந்தர், பேரவைத் தலைவரின் முடிவு சட்டவிரோதம் என்று ஜூன் 14ம் தேதி தீர்ப்பளித்தார். மாறுபட்ட தீர்ப்பால் வழக்கின் முடிவை எட்ட 3வது நீதிபதிக்கு வழக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில், தீர்ப்பு குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் ஜூன் 17ம் தேதி தொலைக்காட்சி பேட்டிகளில் விமர்சனம் செய்தார். தீர்ப்பு வாங்கப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி குறித்து நேரடியாக விமர்சனம் செய்துள்ள அவர், தகுதி நீக்கத்தை எதிர்த்து தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்தார்.