சென்னை: புயல் பாதித்த பகுதிகள் போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது. அங்கு பொதுமக்கள் போர்வையில் சமூகவிரோதிகள் செயல்படுகிறார்கள் என்று அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று சென்னை, எழிலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் வேகமாக நடைபெறவில்லை என்று சிலர் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். அதற்கு பொதுமக்கள் முக்கியத்துவம் தர தேவையில்லை. சிலர் வீட்டிலேயே உட்கார்ந்து சமூக வலைதளங்களில், நாகப்பட்டினம் மாவட்டம் எந்த திசையில் உள்ளன. அங்கு எந்த பகுதி பாதிப்பு என நேரிலே பார்க்காமல் விமர்சனம் செய்கிறார்கள்.