புதுடெல்லி: அமிர்தசரஸ் மத நிகழ்ச்சி குண்டு வீச்சு தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டார். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே அதிவால் கிராமத்தில் மத நிகழ்ச்சியின் போது, கையெறி குண்டுவீச்சு தாக்குதல் சம்பவம் நேற்று முன்தினம் நடந்தது. இது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் ஆதரவு தீவீரவாதிகள் நடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அமைச்சக அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அமைப்புகள், குண்டுவீச்சு தொடர்பான தகவல்களை ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்தனர். பின்னர் ராஜ்நாத் சிங், பஞ்சாப் அரசுக்கு உரிய உதவிகளை செய்யுமாறும், தாக்குதல் நடத்தியவர்களை பிடிப்பதற்கான விசாரணையை தீவிரமாக மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி