புதுக்கோட்டை: மத்திய அரசின் உதவியால் தான் தமிழகத்தில் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெறுவதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் பேட்டியளித்த தமிழிசை, தஞ்சை, நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் புயல் தாக்கத்தினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு, தீப்பெட்டி, கொசுவர்த்தி, கொசு வலை கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று நாகப்பட்டினத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நான் பார்வையிட்டு, பாஜ சார்பில் நிவாரண பொருட்களை வழங்க உள்ளேன் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் தமிழிசை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழிசை, தமிழக அரசு மீட்புப்பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருவதாக கூறினார். எதிர்க்கட்சியினர் புயலை வைத்து அரசியல் செய்வதை விட்டுவிட்டு களத்தில் இறங்கி மக்களுக்கு உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மத்திய அரசின் உதவியால் மீட்புப்பணி மற்றும் நிவாரண பணிகள் துரிதமாக நடைபெறுவதாக தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அரசுக்கு போதிய நிவாரணம் மத்திய அரசு வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி