கொழும்பு: அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா நடத்திய அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் தோல்வியில் முடிந்தது. இலங்கையில் அரசியலில் அதிகார மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிய அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை நியமித்தார். ஆனால், ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்றம் கூட்டப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தார்.இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவு எம்பிக்கள், நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். மிளகாய் பொடி வீசி தாக்குதல் நடத்தினர். தடுக்க வந்த போலீசார் மீது நாற்காலிகள் வீசி தாக்கினர். நாடாளுமன்றத்தில் நடந்த அடிதடி ரகளையில் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவும் தாக்கப்பட்டார். இதனால், அவையை இன்று வரை ஒத்தி வைத்துள்ளார். இந்நிலையில், அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காண அதிபர் சிறிசேனா நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.