புதுக்கோட்டை: புதுக்கோட்டை திருவப்பூரில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.10 லட்சம் போதாது. ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும். மத்திய அரசு பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சிறப்பு நிதி அறிவிக்க வேண்டும். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்பாக இருந்தபோதிலும் புயலுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பதிலும், நிவாரணம் வழங்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது.