சென்னை:சென்னை, சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 6.20 மணி அளவில் புறப்பட்டது. ரயிலை டிரைவர் எஸ்.சி.சாய் டிரைவர் ஓட்டினார். கார்டாக குமரகுரு இருந்தார். ரயிலில் 1500க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ரயில் சுமார் 7மணி அளவில் ஆவடி அடுத்த பட்டாபிராம்- நெமிலிச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது திடீரென்று இன்ஜினின் ஒரு பகுதியிலிருந்து கரும்பு புகை வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் சாய் உடனடியாக ரயிலை நடுவழியில் நிறுத்தினார். ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயிலில் இருந்த தீயணைப்பான் உதவியுடன் இன்ஜினில் பற்றிய தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை.
பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி அலறி அடித்து தண்டவாளங்கள் வழியாக ஓடினர். தகவல் அறிந்து ரயில்வே அதிகாரிகள், தொழில்நுட்ப ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராட்சத தீயணைப்பான் உதவியுடன் இன்ஜினில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், முழுமையாக அணைக்க முடியவில்லை. இதனால், திருவள்ளூரில் இருந்து மற்றொரு இன்ஜின் கொண்டு வரப்பட்டு, அதன் உதவியுடன் தீப்பற்றிய இன்ஜின் அப்புறப்படுத்தப்பட்டு, ஆவடியில் இருந்து தீயணைப்பு வாகனத்தை கொண்டு வந்து 5 வீரர்களுடன் ரயில் இன்ஜினில் பிடித்த தீயை முழுமையாக அணைத்தனர். அந்த இன்ஜினை அதிகாரிகள் பணிமனைக்கு எடுத்துச் சென்றனர்.
இதற்கிடையில், இன்ஜினில் பற்றிய தீயை அணைக்கும் போது பாதுகாப்பு கருதி ரயில்வே பாதையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சென்னை- அரக்கோணம் மார்க்கத்தில் அரை மணி நேரம் எந்த ரயிலும் இயக்கப்படவில்லை. புறநகர் ரயில் சேவை துண்டிக்கப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.இந்த தீ விபத்தால் 4மணி நேரம் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நின்றது. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.பின்னர் 11 மணியளவில் பேசின் பிரிட்ஜ் பணிமனையில் இருந்து மாற்று இன்ஜின் கொண்டு வரப்பட்டு திருப்பதிக்கு ரயில் புறப்பட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி