சென்னை: திமுக எம்.பி. கனிமொழி நேற்று பகல் 1.30 மணி விமானத்தில் தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்சாரம் முழுமையாக தடைபட்டுள்ளது. மாவட்ட மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர். மருத்துவ வசதிகள் மற்றும் அவசர தேவைக்கு எதுவும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த மக்கள் வேறு எங்கும் போகவும் முடியவில்லை. இதேபோல் பல கஷ்டங்களுக்கு மக்கள் ஆளாகி உள்ளனர். விவசாய பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் முழுமையாக சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த நேரத்தில் மக்களுக்கு அடிப்படை தேவைகள் கிடைப்பதற்கு அரசு விரைந்து செயல்பட வேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் டெங்கு போன்ற காய்ச்சல்களால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது எங்கும் புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சுகாதாரத்துறை முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த புயலில் உயிர் இழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. ஆனால் இந்த ரூ.10 லட்சம் பெரியது அல்ல. எத்தனை லட்சம் நிதி உதவி அளித்தாலும் உயிர் இழப்புக்கு ஈடு செய்ய முடியாது. எனவே உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி