சேலம்: தமிழகத்தில் ஈரோடுக்கு அடுத்தப்படியாக சேலம், தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மஞ்சள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் மஞ்சளை விவசாயிகள் விற்பனைக்காக சேலம் லீ பஜார், ஈரோடு மஞ்சள் மண்டிக்கு கொண்டு செல்கின்றனர். மஞ்சள் மண்டிகளுக்கு விற்பனைக்கு வரும் மஞ்சளை ஏலம் எடுக்க சென்னை, கோவை, மதுரை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மஞ்சள் சாகுபடி அதிகரித்துள்ளன. இதன் காரணமாக வட மாநிலங்களில் சேலம், ஈரோடு உள்ளிட்ட மஞ்சள் மண்டிகளுக்கு மஞ்சள் வரத்து கூடியுள்ளது. இதனால் உள்ளூர் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என புலம்பி வருகின்றனர்.
இது குறித்து சேலத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: வட மாநிலங்களில் பெய்த மழையால் கடந்த நான்கு மாதமாக மஞ்சள் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு மஞ்சள் வரத்து கூடியுள்ளது. அதேவேளையில் தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் மழை கை கொடுத்துள்ளதால், நடப்பாண்டு நல்ல விளைச்சல் தர வாய்ப்புள்ளது. கடந்த சில மாதங்களாக மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காமல் இருந்தன. எப்படியும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்குமென எதிர்பார்த்தோம்.
ஆனால் தீபாவளி பண்டிகைக்கு பிறகு நேற்றுமுன்தினம் மஞ்சள் ஏலம் நடந்தது. அந்த ஏலத்திலும் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவில் விலை கிடைக்கவில்லை. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் ஒரு குவிண்டால் மஞ்சள் ₹ 8500 ஆயிரம் முதல் ₹ 9500 ஆயிரம் ஏலம் போனது. ஆனால் நடப்பாண்டு குவிண்டால் ₹ 7200 முதல் ₹ 7700 என ஏலம் நடந்தது. கடந்தாண்டை ஒப்பிடுகையில், நடப்பாண்டு குவிண்டாலுக்கு ஆயிரம் முதல் ₹ 1500 விலை குறைந்துள்ளது. வழக்கமாக ஏலத்திற்கு 70 முதல் 80 டன் வரும். உரிய விலை கிடைக்காததால், கடந்த சில மாதமாக 40 முதல் 50 டன் தான் விற்பனைக்கு வருகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி