குட்கா விற்பனையில் காலூன்றும் வடமாநில வியாபாரிகள் சென்னை முழுவதும் அதிரடி சோதனை

சென்னை: வடமாநில குட்கா வியாபாரிகள் சென்னையில் போதை பொருட்கள் ரகசியமாக கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்படி, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ேநற்று சென்னை முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் குட்கா விற்பனை தடை செய்யப்பட்ட பிறகு சுகாதாரத்துறை, மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை துணையுடன் தடையின்றி தமிழகம் முழுவதும் குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக குட்கா வியாபாரி மாதவராவ் அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து வந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய சிபிஐ குட்கா விற்பனைக்காக லஞ்சம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதைதொடர்ந்து குட்கா வியாபாரி மாதவராவ் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள் உட்பட 7 பேரை சிபிஐ அதிரடியாக கைது செய்தது. இதற்கிடையே மாதவராவ் கைது செய்யப்பட்ட பிறகும், தமிழகத்தில் தற்போதும் குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் தடையின்றி அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குட்கா விற்பனையை போலீசாரால் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் பின்னணி குறித்து விசாரணை நடத்திய போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

குட்கா விற்பனையில் மாதவராவ் இடத்தை நிரப்பும் வகையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இரண்டு வியாபாரிகள் தமிழகத்தில் காலூன்றி உள்ளது தெரியவந்தது. அவர்கள் வடமாநிலங்களில் இருந்து குட்கா உட்பட போதை வஸ்துக்களை கேரளா, கர்நாடகா, ஆந்திரா வழியாக தமிழகத்திற்குள் காய்கறி லாரிகள், மருந்து பொருட்கள் ஏற்றி வரும் லாரிகளில் மறைத்து கொண்டு வருவது தெரியவந்துள்ளது. போதை பொருட்களை கடத்தி வந்து மாவட்ட வாரியாக விற்பனை செய்யப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் ஆனி விஜயா உத்தரவுப்படி சென்னை மாநகர காவல் துறையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் போதை பொருள் தடுப்பு பிரிவு 12 டிஎஸ்பிகள், 24 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 120 போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனை குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள கடைகள், சாலையோர பெட்டி கடைகள், கஞ்சா வழக்கில் தொடர்புள்ள ரவுடிகள் வீடுகள், சந்தேகத்திற்கு இடமான குடோன்களில் என பல இடங்களில் நடத்தப்பட்டது. நேற்று நடந்த சோதனையில் பல லட்சம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. சோதனை முடிவுக்கு பிறகே பறிமுதல் செய்யப்பட்ட போதை வஸ்துக்கள் மற்றும் அவற்றின் மதிப்பு குறித்து தெரிவிக்கப்படும் என்று போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: