சென்னை: வழிப்பறி கொள்ளையர்களுடன் கூட்டு சேர்ந்து திருட்டு ெசல்போன்களை வாங்கி விற்பனை செய்து வந்த கில்லாடி வியாபாரியை போலீசார் கைது செய்தனர். சென்னையில் தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் வாலிபர்களிடம் முகவரி மற்றும் நேரம் கேட்பது போல் நடித்தும், அரிவாளால் வெட்டியும் தொடர் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக, தி.நகர் காவல் மாவட்டத்தில் தான் அதிகளவில் வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. இதனால் தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தன் செல்போன் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை போலீசார் பிடிபட்ட செல்போன் கொள்ளையர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில், பொதுமக்களிடம் வழிப்பறி செய்யும் விலை உயர்ந்த செல்போன்களை பர்மா பஜாரில் செல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தி வரும் பெரம்பூரை சேர்ந்த அப்துல் ரகுமான் (28) என்பவரிடம் 1000 முதல் 3000 ஆயிரத்திற்கு விற்பனை செய்ததாக தெரிவித்தனர். அதைதொடர்ந்து தனிப்படை போலீசார், செல்போன் வாங்கும் வாடிக்கையாளர் போல் பர்மா பஜாரில் உள்ள அப்துல் ரகுமான் கடைக்கு சென்று செல்போன் வாங்கினர். அந்த செல்போனை தனிப்படை போலீசார் ஆய்வு செய்த போது, ஐ-போன்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை தனி சாப்ட்வேர் மூலம் அழித்து புதிய போன்கள் போல் மாற்றியது தெரியவந்தது. மேலும், செல்போன் நிறுவனத்தின் ஐஎம்இஐ எண்களையும் போலியாக பதிவேற்றம் செய்து புதிய போன் என்று அதிக விலைக்கு திருட்டு போன்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
பின்னர், தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் பர்மா பஜாரில் உள்ள அப்துல் ரகுமான் கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது செல்போன் கொள்ளையர்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்ட 40 ஐ-போன்கள் உட்பட 70 விலை உயர்ந்த ெசல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து வழிப்பறி கொள்ளையர்களுடன் கூட்டு சேர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக அப்துல் ரகுமான் திருட்டு போன்கள் வாங்கி புதிய போன்கள் போன்று விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தனிப்படை போலீசார் அதிரடியாக அப்துல் ரகுமானை கைது செய்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி