வந்தவாசி,வந்தவாசியில் மின்னல் தாக்கி மூதாட்டி படுகாயம் அடைந்தார். கஜா புயல் தாக்கத்தால் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் நேற்று மாலை முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி பேபியம்மாள் (75) என்பவர் வீட்டின் முன்பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென மின்னல் தாக்கி கால் பகுதியில் படுகாயமடைந்தார். மேலும் வீட்டின் முன்பக்க கதவு ஜன்னல் மின்னல் தாக்கி சுக்குநூறாக உடைந்து சேதமானது. உடனே அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த மின்னல் தாக்குதலின்போது மூதாட்டியின் வீட்டில் இருந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.