வேலூர்: வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பிரட் ஆம்லெட் சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்து எல்லை பாதுகாப்பு படை வீரர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பாஸ்ட்புட் மற்றும் தள்ளுவண்டி கடைகள் உள்ளன. இங்குள்ள ஒரு கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் ஒருவர் குடிபோதையில் பிரட் ஆம்லெட் சாப்பிட்டுள்ளார். ஆனால் பணம் கொடுக்கவில்லையாம். கடைக்காரர் பணம் கேட்டதற்கு, அந்த நபர் ‘நான் யார் தெரியுமா? நான் போலீஸ், என்னிடமே பணத்தை கேட்கிறயா? எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் கடையில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி உள்ளார். தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர் எல்லை பாதுகாப்பு படை வீரர் என்பதும், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் கடையை அடித்து நொறுக்கியதற்காக ₹3 ஆயிரத்தை கடைக்காரரிடம் தருவதாக உறுதி அளித்தார்.இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.