ஆம்பூர்: ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து ஏற்படும் விபத்துகளை தடுக்க போலீசார் 3 இடங்களில் பிளிங்கர் சிக்னல்களை அமைத்துள்ளனர்.சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் ஆறு வழி சாலையில் ஆம்பூர் முக்கிய நகரமாக திகழ்கிறது. இரு பகுதிகளாக பிரிக்கும் இந்த ஆறு வழிச்சாலை மற்றும் ரயில்வே தண்டவாளம் ஆகியவற்றை அன்றாடம் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்து செல்கின்றனர். மேலும் சென்னை, பெங்களூரு, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அன்றாடம் ஆயிரக்கணக்கான கனரக மற்றும் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் இந்த தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கின்றன. நாள்தோறும் ஆம்பூர் சரகத்திற்குட்பட்ட பள்ளிகொண்டா காவல் நிலையம், ஆம்பூர் தாலுகா காவல் நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில் விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இதைத்தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தத்திடம் கோரிக்கை விடுத்தனர்.