கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா மீது ராஜபக்சே ஆதரவு எம்பிக்கள் மிளகாய் பொடியை தூவி அட்டூழியத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த கலாட்டா காரணமாக, ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்று நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உருவானது. இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை, அந்த பதவியை விட்டு நீக்கிய அதிபர் மைத்திரிபால சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக்க நியமனம் செய்தார். இதை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கே கட்சி, மற்றும் எதிர்க்கட்சியினர் சேர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14ஆம் தேதி, அதாவது இரு தினங்கள் முன்பாக நடைபெற்றது. அதில் ராஜபக்சே அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து அவரது ஆட்சி நீடிக்காது என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார். இந்த நிலையில் அதிபர் மைத்திரிபால சிறிசேனா, சபாநாயகரையும், எதிர்க்கட்சியினரையும் சந்தித்து மீண்டும் ஒருமுறை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நடத்தும்படியும், கடந்த முறை போல நாடாளுமன்றத்தில் அமளி நடக்கும்போது, இல்லாமல், அமைதியாக இருக்கும்போது இந்த வாக்கெடுப்பு நடத்துவது தான் ஜனநாயகத்திற்கு உகந்தது என்றும் அறிவுரை வழங்கினார்.