கரூர்: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மடிக்கணினி வரும் ஜனவரி முதல் வாரம் முதல் வழங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் டிசம்பர் மாத இறுதிக்குள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளும் கடந்த ஆண்டு மடிக்கணிணி பெறாத மாணவர்களுக்கு ஜனவரி மாத முதல் வாரத்தில் மடிக்கணிணிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கரூரில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்று போது தெரிவித்தார். கரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 61_வது குடியரசு தின விழா போட்டிகள் துவக்க விழா வெண்ணெய்மலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.