சென்னை : முதலமைச்சர் உத்தரவின்படி போர்க்கால அடிப்படையில் அனைத்து துறைகளும் செயல்படுகிறது என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். முன்னதாக வங்கக் கடலில் உருவான கஜா புயல் நாகை - வேதாரண்யம் இடையே அதிராம்பட்டினத்தில் 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் முழுமையாக கஜா புயல் கரையை கடந்தது. இதற்கிடையே கஜா புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் இதுவரை 28 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். கஜா புயலில் சிக்கி 216 குடிசைகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால், பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது முதலமைச்சர் உத்தரவின்படி போர்க்கால அடிப்படையில் அனைத்து துறைகளும் செயல்படுகிறது என்று கூறினார். மின் விநியோகம் மற்றும் சாலை போக்குரவத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முதலமைச்சர் உத்தரவின் பேரில் இரவு முதலே மீட்புப் பணிகள் நடைபெறுவதாகவும் என்றும், போர்கால அடிப்படையில் விரைவாக இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார். மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து கஜா புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கிடும் பணி இனி தான் தொடங்கும் என்றும் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி