திருவொற்றியூர்: கஜா புயல் காரணமாக கடந்த இரு தினங்களாக திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பல இடங்களில் ஆக்ரோஷத்துடன் வரும் ராட்சத அலைகள் கடல் அரிப்பு தடுப்பு பாறாங்கற்களை தாண்டி கடலோரத்தில் வசிக்கும் மீனவர்களின் குடிசைகள் மீது விழுகிறது. இதனால் பல மீனவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் குடிசைகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் எண்ணூர் இந்திரா காந்தி குப்பம், எர்ணாவூர் குப்பம், பெரியகுப்பம், சின்ன குப்பம், நெட்டு குப்பம் போன்ற பல மீனவ கிராமங்களில் கடலோரத்தில் வைக்கப்பட்டுள்ள பைபர் படகுகள் மற்றும் கட்டுமரங்கள், மீன்பிடி வலைகள் ஆகியவைகள் கடல் அலையில் இழுத்துச் செல்லாமல் இருக்க பாதுகாப்பான இடத்தில் கொண்டு வந்து வைத்துள்ளனர். மேலும் காற்று அதிகமாக வீசுவதால் அடுத்தடுத்து ராட்சத அலைகள் ஆர்ப்பரித்து வருவதாலும் கடந்த இரு தினங்களாக மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை.