புதுடெல்லி: ‘‘ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு பிரான்ஸ் அரசு உத்தரவாதம் அளிக்கவில்லை’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை கொள்முதல் செய்ய கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதில், ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதை மத்திய பாஜ அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில், ரபேல் விமானங்களை கொள்முதல் செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் நேற்று முன்தினம் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், `பிரான்சிடம் இருந்து 36 ரபேல் விமானங்களை கொள்முதல் செய்வது தொடர்பான ஒப்பந்தத்திற்கு அந்த நாட்டு அரசு உத்தரவாதம் அளிக்கவில்லை. அதே நேரத்தில் அந்த அரசு இந்தியாவுக்கு ஒப்புதல் கடிதம் ஒன்றை அளித்துள்ளது. அது அரசின் உத்தரவாதம் என்பதற்கு போதுமானது என்று தெரிவித்தார்.