பெங்களூரு: பெங்களூருவில் டயர் இல்லாமல் ரிம்மில் ஓடிய கார் சாலையில் தீப்பொறி தெறிக்கவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரு காமாட்சிபாளையம் சரகத்திற்குட்பட்ட லக்கரேவில் இருந்து சும்மனஹள்ளி செல்லும் சாலையில் நேற்று முன்தினம் வெள்ளை நிற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடி கொண்டிருந்தது. அந்த வழியாக சென்ற பைக் ஓட்டிகள் மற்றும் காரில் சென்ற தம்பதிகள் அதைப்பார்த்து, வாகனத்தை நிறுத்த முயற்சித்தனர். ஆனால் டிரைவர் நிறுத்தாமல் சென்றார். மேலும் காரின் முன் டயர் வெடித்து சிதறி, வெறும் ரிம் மட்டுமே இருந்தது. அது சாலையில் உரசியபடி சென்றதால் தீப்பொறி கிளம்பியது. பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வண்ணம் சென்ற அந்த வாகனம், சாலையோரம் நின்ற சில பைக், மற்றும் கார்களையும் சேதப்படுத்தியது.