சென்னை: டெங்கு, பன்றிக்காய்ச்சலால் பலர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவங்கள் அனைத்தும் தமிழகத்தில் நடக்காமல் வெளிநாட்டில் நடப்பதை போன்று மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டனத்துக்கு உரியது என்று திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார்.சென்னை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நேர்காணல் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை வகித்தார். மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவெல்ல பிரசாத் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்பி விஸ்வநாதன், சிரஞ்சீவி, கீழானூர் ராஜேந்திரன், தணிகாசலம், ஜி.கே.தாஸ், மாவட்ட தலைவர்கள் சிவ.ராஜசேகரன், வீரபாண்டியன் மற்றும் இரு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை தொடர்ந்து திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது: டெங்கு காய்ச்சல் பிரச்னை இன்னும் ஓயவில்லை. பல மாவட்டங்களில் இறப்புகள் பதிவாகி வருகிறது. பல மாதங்கள் ஆகியும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய மருந்து இல்லாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. தமிழகத்தில் இத்தனை மாதமாக டெங்கு, பன்றிக்காய்ச்சலால் பலர் இறந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் மத்திய அரசு சார்பில் இதுவரை சாதாரண அதிகாரி கூட இங்கு வந்து விசாரிக்கவில்லை. மத்திய அமைச்சரோ, அதிகாரிகளோ, மருத்துவ குழுவோ என்ன நடக்கிறது என்று கூட கேட்கவில்லை. இந்த உயிரிழப்புகள் எல்லாம் ஏதோ வெளிநாட்டில் நடப்பது போன்று தமிழகத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி