சென்னை: எந்த தேர்தல் வந்தாலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்பு திருநாவுக்கரசர் கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று இரவு 7 மணி அளவில் அண்ணா அறிவாலயம் வந்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. சந்திப்புக்கு பின்பு திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். தற்போதைய அரசியல் சூழ்நிலை இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல், கஜா புயல் வரை பல்வேறு விஷயங்களை பேசினோம். இந்த சந்திப்பு திருப்திகரமாக இருந்தது. தொடர்ந்து அவரை நான் சந்தித்து பேசி வருகிறேன். திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருகிறோம்.
சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைப்பாளராக இருந்து பாஜகவுக்கு எதிராக அரசியல் கட்சிகளை ஓரணியில் திரட்டி வருகிறார். அவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது வரவேற்புக்குரியது. ஒரு மோசமான ஆளை வீழ்த்துவதற்கு பத்து பேர் சேருவது உண்டு. மோடி மக்களை ஏமாற்றிவிட்டதால் எல்லா கட்சிகளும் ஒன்று கூடுகின்றன. ரஜினிகாந்த் இன்னும் கட்சியே தொடங்கவில்லை. மோடி பலமானவர் என்று அவர் கூறியிருந்தால் அது சரியல்ல. மோடி பலமானவர் அல்ல. மோசமான ஆள் என்பதால் தான் எல்லோரும் ஒன்று சேருகிறார்கள். 20 தொகுதிக்கான இடைத்தேர்தல் வருமா என்றே தெரியவில்லை. 20 தொகுதிக்கா, 2 தொகுதிக்கா என்று எதுவும் தெரியவில்லை.
ஆனால் தேர்தல் எத்தனை தொகுதிக்கு, எப்போது வந்தாலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். அந்த சூழ்நிலை தற்போது உள்ளது. எம்பிகள் இணைந்து தான் பிரதமரை தேர்வு செய்வார்கள் என்று சீதாராம் யெச்சூரி கூறியிருப்பதாக கேட்கிறீர்கள். அவர் ஒரு கட்சியின் தலைவர். எனவே அவருக்கு கருத்து கூற உரிமை உண்டு. எங்களை பொறுத்தவரை ராகுல்காந்தி தான் பிரதமராக வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி