நாறும் பூ நாதர் கோயில் சிலை திருட்டு விவகாரம் மதுவிலக்கு டி.எஸ்.பி. ஜீவானந்தம் அதிரடி கைது

* காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

* மேலும் ஒரு டிஎஸ்பி தலைமறைவு

சென்னை:  திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரில் உள்ள நாறும் பூ நாதர் கோயிலில் கடந்த 2005ல் ரூ.24 கோடி மதிப்புள்ள ஆனந்த நடராஜர் சிலை உட்பட 13 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டது. இதில் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் மதுரை அருகே உள்ள கட்டம்கோட்டையில் நகைக்கடை நடத்தி வந்த சக்தி மோகன் தேவர் என்பவரை அவரது நண்பர் சவுதி முருகன் தேவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தார். அந்த கொலை நான்கு ஆண்டுகளுக்கு பிறகே தெரியவந்தது. அதன்பிறகு குற்றவாளியான சவுதி முருகன் தேவர் உட்பட 4 பேரை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

அதில், நாறும் பூ நாதர் கோயிலில் சிலைகள் திருடிய வழக்கில் முக்கிய நபராக சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் அப்போது விசாரணை அதிகாரியாக இருந்த டிஎஸ்பி ஜீவானந்தம் இருந்தது தெரியவந்தது. பின்னர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி.பொன்.மாணிக்கவேல் மற்றும் டிஎஸ்பி சுந்தரம் ஆகியோர் மீண்டும் விசாரணை நடத்தினர். இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:  நாறும் பூ நாதர் கோயிலில் திருடிய சிலைகளில் 9 சிலைகள் அப்போது சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் மீட்கப்பட்டது. ஆனால் அதில் ரூ.15 கோடி மதிப்புள்ள ஆனந்த நடராஜர் சிலை உட்பட 4 சிலைகள் மும்பையில் இருந்து லண்டன் வழியாக நியூயார்க் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு தற்போது புழல் சிறையில் உள்ள சிலை கடத்தல் மன்னன் கபூரின் ஆர்ட் ஆப் திபாச்ட் அருங்காட்சியகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.

சிலைகள் திருடிய நபர்கள், அவற்றின் உண்மை தன்மையை அறிய ஆனந்த நடராஜர் சிலை மற்றும் ஆவுடையம்மன் ஆகிய இரண்டு சிலைகளின் கைகள் சென்னை ஐ.ஐ.டி.பேராசிரியர் முருகையன் அமிர்தலிங்கம் மூலம் அறுக்கப்பட்டுள்ளது. பிறகு அதை சிலை கடத்தல் மன்னன் கபூர் ரூ.1 கோடி செலவு செய்து மீண்டும் ஆனந்த நடராஜர் சிலையுடன் இணைத்துள்ளார். அவர் கைது செய்யப்பட்ட பிறகு, நியூயார்க்கிற்கு கடத்தப்பட்ட சிலை மீண்டும் பேங்காக் வழியாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த ஜீவாநந்தம் மற்ற அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து குற்றவாளிகளிடம் பெரும் தொகை லஞ்சம் பெற்றுக்கொண்டு பொய்யான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அவர்களை தப்பிக்க வைத்துள்ளார். இதன் மூலம் டிஎஸ்பி. ஜீவானந்தம் நீதிமன்றத்தை ஏமாற்றியது தெரியவந்தது. மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள டிஎஸ்பி காதர் பாட்ஷா மற்றும் ஓய்வு பெற்ற டிஎஸ்பி. ஹசிப் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, ஜீவானந்தத்திற்கு சிலை கடத்தல் தடுப்பு பரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி ேநற்று டி.எஸ்.பி. ஜீவானந்தம் சென்னை அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். விசாரணையில் சிலை கடத்தல் வழக்கில் லஞ்சம் பெற்று கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அதிரடியாக அவர் கைது செய்யப்பட்டார்.

பிறகு, டிஎஸ்பி.ஜீவானந்தத்தை கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பல அதிகாரிகள் சிக்கியுள்ளதால் டிஎஸ்பி. ஜீவானந்தத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். சிலை கடத்தல் வழக்கில் டிஎஸ்பி ஒருவர் கைது ெசய்யப்பட்ட சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட ஜீவானந்தம் சென்னை அமைந்தகரை, அண்ணா சதுக்கம் ஆகிய இடங்களில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியுள்ளார். பின்னர் வட சென்னை நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணியாற்றி வந்தார். இதற்கிடையில் கடந்த மாதம் அவருக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. தற்போது திருச்சி மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பியாக இருந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: