பழநி கோயில் கந்த சஷ்டி விழாவில் சண்முகர் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பழநி: பழநி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று காலை நடந்த சண்முகர் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டனர். பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று கந்த சஷ்டி.

இவ்விழா கடந்த 8ம் தேதி மலைக்கோயிலில் உச்சிகாலத்தில் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. இன்று காலை 9.30 மணிக்கு துனுசு லக்னத்தில் மலைக்கோயிலில் வள்ளி-தெய்வானை சமேதரராக சண்முகர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. திருக்கல்யாணத்தையொட்டி வள்ளி-தெய்வானை சமேத சண்முகருக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தன. பட்டாடை அணிவிக்கப்பட்டு பல்வேறு ஆபரணங்கள் பூட்டப்பட்டது. பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க மங்கள நாண் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலை மாற்றுதல் போன்ற திருமண சடங்குகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டன.

அன்னதான கூடத்தில் வடை பாயாசத்துடன் பக்தர்களுக்கு திருமண விருந்து நடந்தது. பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியை காணும் வகையில் ஆங்காங்கே மலைக்கோயில் வளாகத்தில் எல்இடி திரை வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், சித்தனாதன் சன்ஸ் செந்தில்குமார், கந்தவிலாஸ் செல்வக்குமார், கண்பத் கிராண்ட ஹோட்டல் உரிமையாளர் ஹரிஹரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இன்று இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் ரிஷப லக்னத்தில் பெரியநாயகி அம்மன் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: